ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கான தனஞ்சய டி சில்வா தலைமையிலான 15 பேர் கொண்ட இலங்கை உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியை இலங்கை முதல் முறை எதிர்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியுடன் தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவதற்காக ஆப்கான் அணி நாளை இலங்கை வரவுள்ளது.
இந்நிலையில் இலங்கை தேர்வுக் குழுவினர் இந்த டெஸ்ட் போட்டிக்கு மூன்று புதுமுக வீரர்களுடன் 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்திருப்பதாக தெரியவருகிறது. இதில் டெஸ்ட் அனுபவம் இல்லாத லஹிரு உதார, சாமிக்க குணசேகர மற்றும் மிலான் ரத்னாயக்க ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை பந்துவீச்சு வரிசையில் பிரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ், விஷ்வ பெர்னாண்டோ மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பந்துவீச்சு வரிசையில் அனுபவ மற்றும் இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டின் ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் இடம்பெற்ற திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ் மற்றும் அணித்தலைவர் தனஞ்சய ஆகிய அனுபவ வீரர்களுடன் நிஷான் மதுஷங்க மற்றும் சதீர சமரவிக்ரம ஆகிய இளம் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
உத்தேச அணி: தனஞ்சய டி சில்வா (தலைவர்), குசல் மெண்டிஸ் (உ.த.), திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், சதீர சமரவிக்ரம, நிஷான் மதுஷங்க, கமிந்து மெண்டிஸ், லஹிர உதார, பிரபாத் ஜயசூரிய, அசித்த பெர்னாண்டோ, கசுன் ராஜித்த, மிலான் ரத்னாயக்க, விஷ்வ பெர்னாண்டோ, சாமிக்க குணசேகர.