மேல்மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தில் பதினான்கு பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதான தகவல் தொழில்நுட்ப இயக்க கட்டமைப்பொன்று செயல்படுத்தப்படவுள்ளது . இதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மாவட்ட செயலாளர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் அண்மையில் இடம்பெற்றன.
களுத்துறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயற்பாட்டு கட்டமைப்பின் இயக்கம் தொடர்பில் அவசியமான பூர்வாங்க அறிவூட்டல் மற்றும் பயிற்சிப் பட்டறை மாவட்ட செயலாளர் ஜீ.பிரசன்ன ஜனக குமாரவின் வழிகாட்டலில் மாவட்ட செயலாளர் பணிமனையில் இடம்பெற்றது.
மாவட்டத்திலுள்ள பதினான்கு பிரதேச செயலகங்கள் சார்பில் தலா இரண்டு பிரதிநிதிகள் பட்டறையில் கலந்து கொண்டதுடன், ஐந்து விடயங்கள் சம்பந்தமாக ஐந்து கட்டமைப்பு உருவாக்கம் தொடர்பில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அபிவிருத்தித் திட்டம், களஞ்சிய முகாமைத்துவம், ஆவணங்கள் காப்பறை முகாமைத்துவம், தபால், மற்றும் அந்தரங்க கோவைகள் என்பன தொடர்பான விடயங்கள் குறிப்பிட்ட ஐந்து அம்சங்களாகும்.
மேற்படி வேலைத் திட்டத்தின் பிரகாரம் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக மாவட்டத்திலுள்ள பதினான்கு பிரதேச செயலகங்களுக்கும் ஒரே மாதிரியான தரவுகள் கட்டமைப்பு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டள்ளது. களுத்துறை, பாணந்துறை, பண்டாரகம, ஹொரண, இங்கிரிய, மத்துகம, அகலத்தை, புளத்சிங்கள, பேருவல, மதுராவல, தொடங்கொட, மில்லனிய, வில்லாளி மற்றும் பாலிந்தநுவர என்பன மாவட்டத்திலுள்ள பிரதேச செயலக பிரிவுகளாகும்.
களுத்துறை மாவட்ட செயலாளரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள் பிரகாரம் புளத்சிங்கள பிரதேச செயலக அதிகாரிகள், மாவட்ட பயிற்சி பிரிவு மற்றும் லிவிங் லெப் (living lab) பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. இதன் முதற்கட்டமாக களுத்துறை பிரதேச செயலகத்துக்கு மேற்படி ஐந்து கட்டமைப்புகளும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. பின்னர் ஏனைய பிரதேச செயலகங்களுக்கும் குழு அடிப்படையில் திட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர், உதவி பிரதேச செயலாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
எம்.எஸ்.எம்.முன்தஸிர்...? (பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)