இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூவர் அடங்கிய குழுவின் உறுப்பினரும் ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
தமிழரசுக் கட்சி என்பதும் இலங்கை அரசியலில் பல்வேறு தாக்கங்களை செலுத்திய பாரம்பரிய கட்சியாகும். யுத்தத்திற்கு முன்னரும் பின்னரான காலப்பகுதியிலும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பெரும்பான்மையானவர்களின் ஆதரவை தொடர்ந்து பெற்றுவரும் ஒரு கட்சியாகவும் அது உள்ளது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் இலங்கை தமிழரசுக் கட்சி நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும். அந்தப் பணியை அரசியலில் நீண்ட அனுபவம் உள்ள சிவஞானம் சிறிதரன், முன்னெடுப்பார் என எதிர்பார்க்கிறேன்.
அதேபோன்று தமிழரசுக் கட்சி ஆளும் அரசாங்கங்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கடந்த காலம் முழுவதும் கொண்டிருந்தது. இதனால், வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பல அபிவிருத்தித் திட்டங்கள் கிடைக்காது போனது.
தமது கொள்கைகளுக்கு அமைய அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்கும் அதேவேளை, அரசாங்கத்தின் அபிவிருத்திகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் பொறிமுறையொன்று குறித்து தமிழரசுக் கட்சி சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
அதனால், தமிழ் மக்களுக்கான சிறந்த தலைவராக சிறிதரன் உருவெடுக்க பல்வேறு சவால்களை வெற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. அரசியல் தீர்வு, பொருளாதார நன்மைகள் உள்ளிட்ட விடயங்களில் தர்க்க ரீதியான தீர்மானங்களை அவர் எடுக்க வேண்டும் எனவும் சுப்பையான ஆனந்தகுமார் தனது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.