பாதுகாப்பானதும் மலிவான முறையிலும் பனை மட்டையினால் தயாரிக்கப்பட்ட கோழிக்கூடு ஒன்றை திருகோணமலை – உப்புவெளியில் அமைந்துள்ள பிராந்திய கால்நடை வளர்ப்பு பண்ணையின் அத்தியட்சகர் டாக்டர் எம்.ஜே.நௌசாத் ஜமால்தீன் தயாரித்துள்ளார்.
இக்கோழிக்கூடு ஒன்றை தயாரிக்க 12,500 ரூபா வரையே செலவாகும் என்று கோழி வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு இது பெரிதும் உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இக் கூட்டில் வளர்ப்பதன் மூலம் கோழிகளுக்கு தொற்று நோய் பரவுவது குறைவு என்றும் சுத்தமான முட்டைகளை பெறலாம் என்றும் கோழிகளை இலகுவாக பராமரிக்கலாம் என்றும் வெள்ள நீரிலிருந்து கோழிகளை பாதுகாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வீட்டுத் தோட்டங்களில் ஒரு மூலையில் இக்கோழிக் கூடுகளை வைத்து கோழி வளர்ப்பில் ஈடுபடலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். கோழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூட்டின் அளவைப் பெருப்பிக்கலாம். இடவசதி குறைந்த நகரங்களிலும் இக்கூட்டை வைத்து கோழி வளர்ப்பில் ஈடுபடலாம் என்றும் அவர் கூறினார்.
கோழி வளர்ப்பில் அதிகமானோர் ஈடுபடும் வாய்ப்பும் முட்டை உற்பத்தியும் அதிகரிக்கும் வாய்ப்பும் இதனால் ஏற்படும் என்றும் டாக்டர் நௌசாத் ஜமால்தீன் தெரிவித்தார்.