கல்முனை மாநகரசபையின் திண்மக் கழிவற்றல் செயற்பாட்டினை சிறப்பான பொறிமுறையின் கீழ் மேற்கொண்டமைக்காக முகாமைத்துவ உதவியாளர் சேவையைச் சேர்ந்த யூ.எம்.இஸ்ஹாக் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த சேவையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்ற விருது வழங்கல் நிகழ்வின் போதே இச்சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் செயற்பாடுகளை செயற்றிறன் மிக்கதாக மாற்றி, ஊழியர்கள் சேவைப் பொருத்தத்தை மேம்பாடு அடைய வைக்கும் நோக்கில் 16 வெவ்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான சேவை நலன் கௌரவிப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. 35 முகாமைத்துவ உதவியாளர்களில் யூ.எம்.இஸ்ஹாக் மாத்திரம் இவ்விருதினைப் பெற்றுக் கொண்டமை சிறப்பம்சமாகும். 12 கிராமங்களை உள்ளடக்கிய சுமார் ஐம்பத்து ஐயாயிரம் குடியிருப்பாளர்களைக் கொண்ட கல்முனை மாநகரசபை எல்லைக்கான திண்மக் கழிவகற்றல் செயற்பாடுகள் தினமும் நடைபெற்று வருகின்றன. சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர் தகுதி வாய்ந்த அதிகாரியாக கடந்த ஒருவருட காலமாக நியமனம் பெறாத நிலையில் அவ்வெற்றிடத்தை நிரப்பக் கூடிய விதத்தில் முன்வந்து பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றியமைக்காகவே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
சுகாதாரப் பணியாளர்களுடன் நல்லுறவைப் பேணி, சிறப்பான சேவை மக்களைச் சென்றடைய முகாமைத்துவ உதவியாளர் இஸ்ஹாக் மேற்கொண்டுள்ள பணி பாராட்டப்பட்டு வருகின்றது. 1995 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற இவர் நிந்தவூர்,மூதூர், கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களில் 23 வருடங்கள் சேவையாற்றியுள்ளதுடன், நேர முகாமைத்துவம் மற்றும் அரச நியதிகளுக்கேற்ப பணியாற்றும் திறன் என்பவற்றால் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்றவராகவும் திகழ்கிறார்.
எடுத்த காரியத்தை முடிக்கும் திறன்கொண்ட இஸ்ஹாக் பகுதிநேர ஊடகவியலாளராகவும் பணியாற்றி வருகின்றார்..இவர் நற்பிட்டிமுனை உமர் கத்தா-_ ஆசியா உம்மா தம்பதிகளின் புதல்வராவார்.
ஜெஸ்மி எம். மூஸா பெரிய நீலாவணை தினகரன் நிருபர்