பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வங்கி ஏ.ரி.எம் அட்டையை திருடி பொருட்கொள்வனவில் ஈடுபட்டதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கதுருவெல மன்னம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் அனுராதபுரம் பகுதியில் உள்ள அரச வங்கியில் ஏ.ரி.எம் இயந்திரத்திலிருந்து பணத்தை எடுப்பதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த போது பின்பாக நின்றுகொண்டிருந்த சந்தேக நபர் அவரது வங்கி அட்டையை திருடி தப்பிச் சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் திருடிய ஏ.ரி.எம் வங்கி அட்டையிலிருந்து 41,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்