உலக மக்களுக்கு உணவளிக்கும் உன்னத பணியை ஆற்றி வரும் விவசாயப் பெரு மக்களுடைய வாழ்வில் செழுமை உண்டாக வேண்டும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்-பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அவர் தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில்; உலகலாவிய ரீதியாக உணவுப் பொருட்களுக்கு பாரிய தேவைப்பாடு நிலவி வருகிறது.எமது விவசாயிகள் கடந்த காலத்தில் உரத் தட்டுப்பாடு, விவசாய இரசாயனத் தட்டுப்பாடு என பாரிய நெருக்கடி நிலைமையிலும் கூட அவர்கள் உழைப்பைக் கைவிடவில்லை. அவர்களுடைய கடின உழைப்பே இன்றும் எம்மை வாழவைத்துக் கொண்டிருக்கின்றது.
இயற்கை விவசாயமே நோய் நொடியற்ற நிலையான வாழ்வுக்கு வித்திடும் என்ற உண்மையை அனுபவ ரீதியாக உணர்ந்தவர்கள் எம் மூதாதையர்கள்.
ஆனால் நாம் கால ஓட்டத்தால் எம் மூதாதையர்கள் காட்டிய இயற்கையான வழிகளில் இருந்து சற்று விலகி விட்டோம்.அந்த தவறை உணர்ந்து மீண்டும் இயற்கை விவசாயத்தை கையிலெடுத்து நோய் நொடியற்ற ஆரோக்கியமான எதிர்கால சமுதாயத்தை கட்டியெழுப்ப இந்த தைப்பொங்கல் தினத்தில் ஒவ்வொருவரும் திடசங்கற்பம் கொள்ள வேண்டும்.
தைப்பொங்கல் தமிழ் மக்களுடையதும்-விவசாயிகளதும் பெருமைகளை பறைசாற்றும் பாரம்பரிய பண்டிகை.
இன்று தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது தைப்பொங்கல் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மனமகிழ்வடைகிறேன் என மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.