வாகன இறக்குமதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அரசாங்கத்திற்கு தேவையான வாகனங்கள் சிலவற்றை இறக்குமதி செய்வதற்காக மட்டுமே என, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலையில் பொதுவாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக அந்த வர்த்தமானி வெளியிடப்படவில்லை என்றும் அரசாங்கத்தின் சில நிறுவனங்களுக்கு வாகனங்கள் சில அத்தியாவசியமான தேவையாக காணப்படும் நிலையில், சில வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டே அந்த வர்த்தமானி வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் வெளிநாட்டு நிதி உதவிகள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்காக வெளிநாட்டு நிதியுதவியிலிருந்தே, அந்த வாகனங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சுக்கு இரண்டு பஸ் வண்டிகள், சுகாதார அமைச்சுக்கு 21 டபள் கெப் வாகனங்கள்,நடமாடும் மகப்பேற்று செயற்பாடுகள் சேவை நடவடிக்கைகளுக்காக மூன்று வாகனங்கள் மற்றும் தொழில் அமைச்சுக்கு ஒரு வாகனமும் இவ்வாறு இறக்குமதி செய்யப்படவுள்ளன.
அத்துடன், இதற்கு மேலதிகமாக ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு விமானப் பயணிகளை விமானத்திலிருந்து இறக்கி அழைத்து வருவதற்குத் தேவையான மூன்று வாகனங்களும் இறக்குமதி செய்யப்படவுள்ளது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)