நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுவுக்கு எதிரான யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையில், பிரபல போதைப் பொருள் வர்த்தகர்களான குடுரொஷான், கவிந்து மதுரங்க மற்றும் ஹெட்டியாரச்சிகே சிறியானி ஆகியோருக்கு சொந்தமான 1060 இலட்ச ரூபா பெறுமதியான சொத்துக்களை ஊழல் மற்றும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான பொலிஸ் பிரிவு கைப்பற்றியுள்ளது.
இச்சொத்துக்களின் 610 இலட்ச ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட வாகனம், 450 இலட்ச ரூபா பெறுமதியான வீடு மற்றும் காணிகளும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள பிராடோ ரக ஜீப் வண்டியின் பெறுமதி 330 இலட்சம் ரூபா என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் 130 இலட்சம் ரூபா பெறுமதியான கே.டி.எச்.ரக வான், 76 இலட்சம் ரூபா பெறுமதியான கார், 64 இலட்சம் ரூபா பெறுமதியான கார், 10 இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கரவண்டி, 15 இலட்சம் ரூபா பெறுமதியான 7.5 பேர்ச்சஸ் காணி, 45 இலட்சம் ரூபா பெறுமதியான மாலபே பிரதேசத்திலுள்ள காணி, 240 இலட்சம் ரூபா பெறுமதியான ரஜவத்த டெரஸ், ஜா-எல கொடுகொட பிரதேசத்திலுள்ள 12.5 பேர்ச்சஸ் காணி, 2 மாடிவீடுகள், 150 இலட்சம் ரூபா பெறுமதியான ஜா-எல நிவன்தன தெற்கிலுள்ள காணி ஆகியவையும் பொலிஸா ரால் கைப்பற்றப்பட்ட சொத்துக்களில் உள்ளடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, தடைசெய்யும் வகையில் நீதிமன்ற உத்தரவை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்