இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் வாழும் சீக்கிய சமூகத்தினர் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
சீக்கிய மதத்தின் கண்ணியம் மற்றும் கௌரவத்தைப் பாதுகாக்க சாஹிப்சாதா ஜோராவர் சிங் மற்றும் அவரது சகோதரர் சாஹிப்சாதா பட்டே சிங் ஆகியோர் மேற்கொண்ட உச்சபட்ச தியாகத்தை நினைவுகூறும் வகையில் வீர் பால் திவாஸ் நிகழ்வை கொண்டாட ஏற்பாடு செய்தமைக்கே அந்த சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் பிரதமருக்கு நன்றி கூறியுள்ளனர்.
வீர் பால் திவாஸ் தினத்தை விடுமுறை தினமாக அறிவித்த இந்தியா, இத்தினத்தை முழு நாட்டிலும் அனுஷ்டிக்க ஏற்பாடும் செய்தது. அத்தோடு உலகெங்கிலும் இத்தினம் கொண்டாடப்படும் வகையில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க நடவடிக்கையையும் பிரதமர் மோடி முன்னெடுத்தார்.
அந்த வகையில் புதுடில்லியில் நடைபெற்ற வைபவத்தில் பிரதமருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்தோடு ஐக்கிய அரபு இராச்சியம், அமெரிக்கா, கனடா, கிறீஸ், நியூஸிலாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் வாழும் சீக்கிய சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் பிரதமர் மோடிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.
“எங்கள் நம்பிக்கையை சுதந்திரமாக கடைப்பிடிக்க இடமளித்துள்ள ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு எங்கள் நன்றியைக் கூறிக்கொள்வதாக யூ.ஏ.ஈயைச் சேர்ந்த சீக்கிய சமூகப் பிரதிநிதியொருவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு ஏனைய நாடுகளிலுள்ள சீக்கிய சமூகத்தினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.