ஒவ்வொரு விளையாட்டுக்களிலும் தமது திறமையை வெளிப்படுத்தி வரும் பாடசாலைகளை விளையாட்டு பாடசாலைகளாக நியமித்து அவற்றை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டம் அடுத்த வருடம் ஆரம்பமாகும் என கல்வி யமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாடசாலை விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக 1500 மில்லியன் ரூபா அடுத்த வருடத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அதனை கிராமிய ரீதியில் திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
அதே வேளை விளையாட்டுக்களில் திறமையை வெளிப்படுத்தாத பாடசாலைகளை விளையாட்டு பாடசாலைகளாக பெயரிடுவது பொறுத்தமற்றது என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினாக்கள் வேளையில் பிரேம்நாத் சீ தொலவத்த எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,
தற்போதைய விளையாட்டு பாடசாலைத் திட்டம் தோல்வியடைந்துள்ளது. வலல ஏ ரத்னாயக்க பாடசாலை விளையாட்டு பாடசாலையல்ல. எனினும் அதில் சிறந்த விளையாட்டு வீரர்கள் உருவாகியுள்ளார்கள். அவர்கள் சர்வதேச ரீதியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்