க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் அதிகளவு மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலைகளில் உயர்தரத்துக்கு விண்ணப்பிக்கும் போது, அந்த பாடசாலையின் பிள்ளைகளுக்கே முன்னுரிமை வழங்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கல்வி கற்கும் பாடசாலையில் உரிய பாடநெறி இல்லாவிட்டால் ஏனைய பாடசாலைகளில் அந்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
கல்விப் பொது தரா தர சாதாரண தர பரீட்சை யின் பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தரத்திற்கு விண்ணப்பிக்கும் போது பாடசாலைகளுக்கு எவ்வாறு முன்னுரிமை வழங்கப்படுகின்றது என இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வருண லியனகே நேற்று சபையில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில்அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
மாணவர் ஒருவர் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலையில், உயர்தரக் கல்விக்குத் தேவையான பாடப் பிரிவு அல்லது பாடங்களின் சேர்க்கை இல்லாவிட்டால் அதை அந்த பாடசாலையின் அதிபர் உறுதி செய்ய வேண்டும்.
அவ்வாறு பாடசாலை அதிபர் உறுதிப்படுத்தினாலும் இல்லாவிட்டாலும் மாணவர்கள் அதைக் கோர முடியும். உதாரணமாக, கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் 9ஏ பெற்றுக்கொண்ட 182 மாணவர்கள் உள்ளனர். அதேபோன்று கொழும்பு விசாகா கல்லூரியில் அவ்வாறான மாணவர்கள் 206பேர் கல்வி பயில்கின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், வேறு பாடசாலைக்கு அதற்காக விண்ணப்பிப்போருக்கு அந்தந்த தகுதிகளுக்கு உரிய வகையில் முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)