கிழக்கு மாகாணத்தில் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் வீதி அபிவிருத்திப் பணி ஆரம்பிக்கப்பட்டு, இடையில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து கிராமிய வீதி அபிவிருத்தி திட்டங்களையும் உடனடியாக பூர்த்தி செய்யுமாறு, கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பணித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் அத்திட்டங்களை செயற்படுத்துவதிலுள்ள பிரச்சினைகளை ஆராய்வது தொடர்பான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை (12) செத்சிறிபாயவிலுள்ள கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சில் நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு பணித்துள்ளார்.
அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள கிராமிய வீதி அபிவிருத்தி பணிகளை துரிதகதியில் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இதன்போது வீதி அடையாளம் இடல், பெயர்ப்பலகை இடல், வீதிகளில் பாதசாரிக் கடவை கோடிடல் உள்ளிட்ட பணிகளை துரிதகதியில் பூர்த்தி செய்யவும் செயற்றிட்ட பொறியியலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.