சட்டரீதியாக நாட்டுக்குள் வரும் குடியேறிகளை குறைக்கும் திட்டத்தை பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. பிரிட்டனில் சாதனை எண்ணிக்கையான குடியேறிகளின் வருகை பிரதமர் ரிஷி சுனக் அரசு மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையிலேயே இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி நாட்டுக்குள் வருவதற்கு தேர்ச்சிபெற்ற தொழிலாளர்கள் ஈட்ட வேண்டிய குறைந்தபட்ச சம்பளம் 26,200 பெளண்ட்ஸ்களில் இருந்து 38,700 பெளண்ட்ஸ்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் சுகாதாரம் மற்றும் சமூக சேவையாளர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதில் வெளிநாட்டு சுகாதார பணியாளர்கள் தமது விசாவில் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வருவது நிறுத்தப்படுவதோடு சுகாதார சேவையை பயன்படுத்துவதற்கு குடியேறிகள் செலுத்த வேண்டிய கூடுதல் கட்டணம் 66 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று குடும்ப விசாவுக்கான குறைந்தபட்ச வருவாயும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.