தமிழ் அரசியல் கைதிகள் 70 பேர் சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் விஜேயதாச ராஜபக்ஷ நீதியமைச்சராக பொறுப்பேற்றதும், அந்த எண்ணிக்கை 14 ஆக குறைந்துள்ளதாகவும் இதற்காக நன்றி தெரிவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி தர்மலிங்கம் சித்தார்த்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பெரும் ஆர்வத்துடனும் மனிதாபிமானத்துடனும் நீதியமைச்சர் செயற்பட்டு நடவடிக்கை இதற்கு எடுத்துள்ளமைக்கு பாராட்டு தெரிவிப்பதுடன் மீதியாக உள்ள 14 பேரையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சபையில் அவர் கேட்டுக் கொண்டார்.
வரவு செலவுத் திட்டத்தில் நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்கான செலவின தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே, தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படும் நிலையில் புதிதாக பலர் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதாகி வருவதை குறிப்பிட வேண்டும்.யுத்தம் நிறைவடைந்த போது 05 வயதாக இருந்த சிறுவனுக்கு கூட புலிகளுடன் தொடர்பு உள்ளதாக் குறிப்பிட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். விஜேதாச ராஜபக்ஸ நீதியமைச்சராக பொறுப்பேற்றபோது தமிழ் அரசியல் கைதிகளாக சுமார் 70 பேர் சிறைகளில் தண்டனை அனுபவித்து வந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 14 ஆக குறை்துள்ளது. இந்த அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி தொடர்ந்து பல கலந்துரையாடல்களை நடத்தினார். அதில் நீதியமைச்சரும் கலந்து கொண்டிருந்தார்.
அப்போது இந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற முடிவு எட்டப்பட்டது. அந்த முடிவில் ஆர்வத்துடனும் மனிதாபிமானத்துடனும் செயற்பட்டவர் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச.
அந்த வகையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் மிகுதியாகவுள்ள 14 பேரையும் விடுவிப்பதற்கும் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக அவர்களின் உறவுகள் மற்றும் தமிழ் மக்கள் சார்பில் வேண்டுகோளை முன் வைப்பதோடு நீதியமைச்சருக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
லோரன்ஸ் செல்வநாயகம்