நுண் கடன் திட்டத்தின் செயற்பாடுகளால் நாட்டில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உக்கிரமடைந்துள்ள இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக நுண்கடன் நிதி நிறுவனங்களை கண்காணிக்கும் வகையில் அதிகார சபையொன்றை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளதாகவும் நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்கான சட்டமூலம் ஒன்றை எதிர்வரும் மாதங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்கு எதிர்க்கட்சியினர் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.நுண் கடன் திட்டத்தின் கொடுமைகளுக்கு ஆதிவாசிகளும் தற்போது அகப்பட்டுள்ளார்கள் என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அமைச்சர், மத்திய வங்கியால் மாத்திரமே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்கான செலவின தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில், டிலான் பெரேரா எம்பி எழுப்பிய கேள்வி யொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,
நூற்றுக்கணக்கில் அன்றி தற்போது மில்லியன் கணக்கான மக்கள் நுண்கடன் திட்டங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மிக மோசமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
அந்த வகையில் மத்திய வங்கியால் மாத்திரமே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். எனினும் சட்ட சிக்கல்கள் காரணமாக தற்போது அதில், சில பிரச்சினைகள் உருவாகியுள்ளன. எவ்வாறாயினும் இந்தப் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும். அதனை கவனத்திற் கொண்டு நுண்கடன் நிதி நிறுவனங்களை கண்காணிக்கும் வகையில் அதிகார சபையொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்