இங்கிலாந்து டெஸ்ட் அணித் தலைவர் பென் ஸ்டொக்ஸ் இடது முழங்கால் காயத்துக்கு சத்திரசிகிச்சை செய்துகொண்டுள்ளார்.
இடது முழங்கால் காயம் காரணமாக நீண்ட காலமாக அவதியுறும் 32 வயது ஸ்டொக்ஸ் அந்தக் காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியதோடு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மூன்று ஆஷஸ் டெஸ்டில் பந்துவீசவில்லை. அண்மையில் உலகக் கிண்ண தொடரிலும் துடுப்பாட்ட வீரராக மாத்திரமே களமிறங்கினார்.
இந்நிலையில் ஸ்டொக்ஸ், லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் முழங்கால் காயத்துக்கு சத்திரசிகிச்சை செய்து கொண்டார். இவர் விரைவில் முழு உடற்தகுதி பெறும் பட்சத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்திய மண்ணில் நடக்கவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கலாம்.
இதுகுறித்து ஸ்டொக்ஸ் வெளியிட்ட செய்தியில், “இடது முழங்காலில் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. காயத்தில் இருந்து மீண்டு வர தேவையான மறுவாழ்வு பயிற்சியை விரைவில் ஆரம்பிக்க உள்ளேன்” என தெரிவித்திருந்தார்.