இஸ்ரேலிய வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான கொள்கலன் கப்பல் ஒன்றின் மீது இந்திய பெருங்கடலில் வைத்து ஆளில்லா வான் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் தயாரிப்பு ஷஹித் 136 ஆளில்லா விமானம் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பெயரை வெளியிடாத அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மோல்டா கொடியுடன் பிரான்ஸில் இயக்கப்படும் கப்பல் மீதே சர்வதேச கடல் பகுதியில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதனால் கப்பலுக்கு சேதம் ஏற்பட்டபோதும் அதில் இருக்கும் பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
எனினும் இது தொடர்பில் ஈரான் தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
ஏற்கனவே இஸ்ரேல் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான கப்பல் ஒன்றை ஈரான் ஆதரவு யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது.