2024ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 68 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவுத் தலைப்புகள் மீதான விவாதம் நடைபெற்றதுடன், விவாதத்தின் முடிவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான வாக்கெடுப்பைக் கோரினார்.
இதனையடுத்து நடத்தப்பட்ட இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இந்நிலையில், 68 மேலதிக வாக்குகளால் ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டதாக, சபாநாயகர் சபையில் அறிவித்தார். வாக்கெடுப்பின் போது நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக ஆளும் கட்சியுடன் எதிரணியின் சில சுயாதீன எம்.பி.க்களும் வாக்களித்த அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிராக வாக்களித்தன.
பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி. ஆகியன வாக்களிப்பில் பங்கேற்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்