கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட இஹல புளியங்குளம் முஸ்லிம் வித்தியாலயத்தில் நேற்று (23) அதிகாலை காட்டு யானைக்கூட்டமொன்று உட்புகுந்து அங்குள்ள சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளது. மரங்கள், பூச்சாடிகள், குடிநீர் குழாய்கள் என்பன இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த பாடசாலையில் வகுப்பறை கட்டட குறைபாடுகள் நிலவுவதால் குறிப்பிட்டதொரு மரத்தடியின் கீழ்தான் சில வகுப்பறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தற்பொழுது அம்மரம் காட்டு யானையினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் பாடசாலை அதிபர் எம்.எஸ். தாரிக் தெரிவித்தார்.
தமது பாடசாலைக்கு சரியான பாதுகாப்பு வேலியின்மையே இவ்வாறான சேதங்களுக்கு பிரதான காரணமெனவும் தெரிவிக்கும் அதிபர், தமது பாடசாலையில் நிலவும் வேலிப்பிரச்சினை மற்றும் கட்டட குறைபாடுகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எதுவிதமான சாதக தீர்வுகளும் எட்டப்படவில்லை எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
கெக்கிராவ குறூப் நிருபர்