இலங்கையிலும், சார்க் பிராந்தியத்திலும் மிகச் சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்களை அங்கீகரித்து, வெகுமதியளிக்கும் வகையில், 2023 ஆம் ஆண்டிற்கான “WCIC Prathibhabhisheka” என்ற தனது முதன்மை நிகழ்வை கைத்தொழில் மற்றும் வர்த்தக மகளிர் சம்மேளனம் (The Women’s Chamber of Industry and Commerce) ஆரம்பித்துள்ளது.
WCIC இன் தலைவர் அனோஜி டி சில்வா அவர்கள் கருத்து வெளியிடுகையில் “பெண் தொழில் முயற்சியாளர்கள் விருது 2023 நிகழ்வானது, 2024 பெப்ரவரியில் இடம்பெறவுள்ளது. பெருமதிப்பிற்குரிய WCIC Prathibhabhisheka – பெண் தொழில் முயற்சியாளர் விருதுகள் 2023 நிகழ்வில் போட்டியிடுவதற்காக கடந்த சில ஆண்டுகளில் தமது நெகிழ்திறன் மற்றும் சாதனைகளைப் பகிர்ந்து, தைரியத்துடன் சவால்களை எதிர்கொண்ட மிகச் சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள், பெண் தொழில் முயற்சியாளர்களின் பரிமாணம், வளர்ச்சிக்கான திடசங்கல்பம் மற்றும் பொருளாதார பங்களிப்புக்காகவும் கௌரவிக்கப்படும் வகையில் வழங்கப்படுகின்றது. இப்போட்டியானது பிரதானமாக, இலங்கையில் தொழில் முயற்சியாளருக்கான போட்டியாக இருக்கும் அதேவேளையில், சார்க் பிராந்தியத்தில் உள்ள பெண்களுக்கான விசேட பிரிவில் போட்டியிடுவதற்கான வாய்ப்பையும் நாங்கள் உள்ளடக்கியுள்ளோம்,” என குறிப்பிட்டார்.
ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் இணைத் தலைவர்களான நிலானி செனவிரட்ண மற்றும் கயானி டி அல்விஸ் ஆகியோர் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கையில், “தொடக்க வணிக முயற்சி (Start-Up), நுண், சிறிய, நடுத்தர மற்றும் பாரிய பிரிவுகளின் கீழ் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. மீளாய்வுக்குட்படும் 2022/23 ஆண்டில் ஒவ்வொரு பிரிவும் குறிப்பிட்ட வருமானத்தை கொண்டிருக்கும். ஒவ்வொரு பிரிவின் கீழும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல விருதுகள் வழங்கப்படும்,” என்று குறிப்பிட்டனர்.
பிராந்தியத்திலுள்ள பெண் தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு, அவர்களை ஊக்குவிக்கும் முகமாக நாட்டில் அனைத்து மாகாணங்களில் இருந்தும் விண்ணப்பங்களை நாம் ஊக்குவிப்பதுடன், ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் “மிகச் சிறந்த பிராந்தியம்” (Best of the Region) தெரிவு செய்யப்படும்.
இளம் பெண் தொழில் முயற்சியாளர், மிகச் சிறந்த தொடக்க வணிக முயற்சி, தைரியமான பெண், ஏற்றுமதியை மையப்படுத்திய மிகச் சிறந்த தொழில் முயற்சியாளர் (தயாரிப்பு மற்றும் சேவைகள்) மற்றும் மிகச் சிறந்த சார்க் பிராந்திய தொழில் முயற்சியாளர் என மதிப்பிற்குரிய விசேட விருதுகளும் பெண்களுக்கு வழங்கப்படவுள்ளன. 2023 க்கான டிஜிட்டல் தொழில் முயற்சியாளர், மிகவும் புத்தாக்கமான தொழில் முயற்சியாளர் மற்றும் சமூக தொழில் முயற்சியாளர் ஆகிய விசேட விருதுகளும் வழங்கப்படவுள்ளன.
“ஆண்டின் மிகச் சிறந்த பெண் தொழில் முயற்சியாளர் – 2023” என்ற விருதுடன் நிகழ்வு முற்றுப்பெறும்.
“நுழைவு விண்ணப்பங்கள் மற்றும் விபரங்களை www.wcicsl.lk மூலமாக பதிவிறக்கம் செய்ய முடியும். விண்ணப்பதாரியின் சாதனைகள் மற்றும் பெறுபேறுகளை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை WCIC இற்கு சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பங்களுக்கான முடிவுத் திகதி 2023 டிசம்பர் 20,” என்று இணைத் தலைவர்களான கயானி டி அல்விஸ் மற்றும் நிலானி செனவிரட்ண ஆகியோர் குறிப்பிட்டனர்.
WCIC Prathibhabhisheka – பெண் தொழில் முயற்சியாளர் விருதுகள் 2023 நிகழ்வுக்கான பிளாட்டினம் அனுசரணையை AIA Insurance Lanka வழங்குவதுடன், வைர அனுசரணையை DFCC ஆலோகவும் (வங்கிச்சேவைப் பங்காளர்), தங்க அனுசரணையை McLarens Group, MAS Holdings ஆகியனவும் வழங்குகின்றன. Hayleys, Causeway Paints Lanka, Imperial Teas, SLT-Mobitel (தொலைதொடர்பாடல் பங்காளர்), Dankotuwa Porcelain, DIMO மற்றும் NIBM (கல்விப் பங்காளர்) ஆகியன வெண்கல அனுசரணையை வழங்குகின்றன. Wijeya Group அச்சு மற்றும் சமூக ஊடக பங்காளராகவும், Triad படைப்பாக்க பங்காளராகவும் மற்றும் Ernst & Young அறிவுப் பங்காளராகவும் செயற்படுகின்றன.
கைத்தொழில் மற்றும் வர்த்தக மகளிர் சம்மேளனம் ஆனது இலங்கையின் தேசிய சம்மேளனம் என்பதுடன், பெண் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் வியாபாரத்துறையிலுள்ள பெண்களுக்கு உதவுகின்ற முதன்மையான ஸ்தாபனமாகும். சமுதாயத்திற்கு தம்மால் பங்களிக்க முடியும் என நம்புகின்ற பெண்கள் இதற்கான அங்கத்துவத்திற்கு தகைமை உடையவர்கள் என்பதுடன், இந்த ஸ்தாபனம் வழங்கும் பல வசதிகள் மூலமாக அவர்கள் பயனடைய முடியும்.
நெகிழ்திறனுடன், பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்பாற்றியுள்ள மிகச் சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்களை அங்கீகரித்து, வெகுமதியளிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முதன்மையான நிகழ்வாக WCIC Prathibhabhisheka அமைந்துள்ளது.
மேலதிக தகவல் விபரங்களுக்கு, தயவு செய்து அழைக்கவும்: 076-6848080