இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, எம்.பிக்களான சுஜித் பெரேரா, ரோஹன பண்டார ஆகியோருக்கிடையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணைக்குழுவின் அறிக்கை, சிறப்புரிமைக் குழுவிற்கு அனுப்பி
வைக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்றுக் காலை சபாநாயகர் அறிவிப்பின்போதே அவர், இதனைத் தெரிவித்தார்.
2023 ஒக்டோபர் 20இல்,பாராளுமன்றக் கட்டிடத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, ரோஹன பண்டார, சுஜித் பெரேரா ஆகியோருக்கிடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரு தரப்பிலிருந்தும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் விரைவாக விசாரணைகளை நடத்தி அதனைப்பாராளுமன்றத்தில் அறிக்கையிட, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ தலைமையில் குழுவொன்றை சபாநாயகர் நியமித்திருந்தார்.
இதற்கமைய இக்குழுவின் உறுப்பினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, ரமேஷ் பத்திரன, கயந்த கருணாதிலக, இம்தியாஸ் பாக்கீர் மாக்கர், தலதா அத்துகோரள மற்றும் இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். மேற்படி குழு, நான்கு தடவைகள் கூடியிருந்தது. சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவும் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழுவின் அறிக்கை, அதன் தலைவர் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸவினால் செவ்வாய்க்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.
லோரன்ஸ் செல்வநாயகம்