வவுனியா, ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கோமரசங்குளம் பகுதியிலுள்ள குளமொன்று உடைப்பெடுத்தமையால் அதன் கீழுள்ள 15 ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி குளத்தின் நீர் தொடர்ந்து வெளியேறிய வண்ணம் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடரும் மழையுடனான காலநிலை காரணமாக பல குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துவருகின்றது. இதனாலேயே கோமரசங்குளம் பகுதியிலுள்ள குளம் உடைப்பெடுத்துள்ளது.
ஊர் மக்கள் பல மணிநேரமாக குளத்தின் உடைப்பெடுத்த பகுதிக்கு மண்நிரப்பி கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை பயனளிக்கவில்லையென தெரிவிக்கின்றனர்.
கோமரசங்குளம் பகுதியிலுள்ள இக்குளம் நீண்டகாலமாக எவ்வித புனரமைப்பு பணிகளுமின்றி காணப்படுவதுடன், குளத்தின் கீழுள்ள 35 ஏக்கர் வயல் நிலங்களில் 15 ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
இவ்வனர்த்தம் தொடர்பில் உரிய தரப்பினருக்கு தகவல் வழங்கியுள்ளதுடன் இக்குளத்திலிருந்து தொடர்ந்தும் நீர் வெளியேறிய வண்ணம் உள்ளது.
வவுனியா விசேட நிருபர்