பேருவளை பிராந்திய எழுத்தாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த ‘விருத்தமேடை’ கலாநிதி அல் அஸூமத்தின் கவிதை குறித்த கலந்துரையாடல் நிகழ்வு கடந்த 05ஆம் திகதி தர்காநகர் அல்-ஹம்ரா மகாவித்தியாலயக் கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் றபீஸ் ஹம்ஸா தலைமையில் நடைபெற்றது.
வளர்ந்துவரும் எழுத்தாளர்களை கவிதை எழுதுவதில் ஊக்குவிக்கும் நோக்குடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பேருவளை பிராந்திய பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள், இளம் எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பங்குபற்றினர்.
கவிதை எழுதுவது எப்படி? கவிதை எழுதுவதற்கான நுணுக்கங்கள், வசனங்களிலிருந்து கவிதை தன்னை வேறுபடுத்திக் காட்டும் விதம், புதுக்கவிதையிலுள்ள படிமங்கள், குறியீடுகள் என அல்அஸூமத் தனது இரு மணிநேர உரையில் விரிவான, தெளிவான விளக்கங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பங்குபற்றுனர்களின் கவிதை குறித்த சந்தேகங்களுக்கு பதில்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வின்போது கலாநிதி அல் அஸூமத் ஒன்றிய நிர்வாகிகளால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். இதன்போது, தர்காநகர் கவிஞர்ஸபா எழுதிய Snow Rain என்ற ஆங்கிலக் கவிதை நூல் அல் அஸுமதுக்கு கையளிக்கப்பட்டது. நிகழ்ச்சிகளை கவிஞர் பஸ்லி ஹமீத் தொகுத்து வழங்க, தலைவர் ரபீஸ் ஹம்ஸா வரவேற்புரையும் கவிஞர் தர்காநகர் ஸபா அறிமுக உரையும் நிகழ்த்தினார்கள். சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரி ஆசிரியர் ரபீக் மொஹிதீன், தர்காநகர் நஸீஹா நவாஸ் ஆகியோர் கவிதை வாசித்தனர். ஒன்றியத்தின் செயலாளர் பஸ்லி ஹமீத் நன்றியுரை நிகழ்த்தினார்.
அல்ஹம்ரா அதிபர் பஸ்லியா பாஸி, ஜாமிஆ நளீமிய்யா கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஷ்செய்க் அரபாத் கரீம் (நளீமி), ஊடகவியலாளர் இக்பால் ஸம்ஸுதீன், பன்னூலாசிரியர் தர்காநகர் முஹம்மத் சனீர், எழுத்தாளர் அஷ்ரப் யூஸுப், கவிஞர் முகம்மத் ஸபா, பஸ்லி ஹமீத் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பேருவளை
பி.எம்.முக்தார்…?