கடந்த 2006ஆம் ஆண்டு கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் அப்போதைய இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பயணித்த வாகனத்தொடரணி மீது இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் மூவரை
விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் இந்தத் தீர்ப்பை வழங்கினார். குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமையால், அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக, நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
யோகராஜா நிரோஜன், கரன் எனும் சுப்பிரமணியம் சுரேந்திர ராஜா மற்றும் கனகரத்தினம் ஆதித்தியன் ஆகிய மூவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்கள் மூவரும் சுமார் 15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டியில் 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பசீர் அலி முகமது பயணித்த வாகனத்தொடரணி மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தி, அவரை படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டே இம்மூவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கில் அரச தரப்பில் சிரேஷ்ட அரச சட்டத்தரணி யோகான் அபேவிக்ரம முன்னிலையானதுடன், கனகரத்தினம் ஆதித்தியன் சார்பாக சட்டத்தரணி தர்மராஜாவின் அனுசரணையுடன் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, சட்டத்தரணி கனில் மத்துமகே ஆகியோர் முன்னிலையாகினர்.
ஏனைய பிரதிவாதிகள் சார்பாக சட்டத்தரணிகளான கனகா சிவபாதசுந்தரம் மற்றும் தனுக மத்துமகேயும் முன்னிலையாகினர்.