“எமக்கான அரசியல் தீர்வு விடயத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கம் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும்” என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸை சந்தித்துக் கலந்துரையாடிய போதே,
இர.சாணக்கியன் எம்.பி. இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்த சந்திப்புத் தொடர்பாக இரா.சாணக்கியன் எம்.பி. மேலும் தெரிவித்த போது, “இந்தச் சந்திப்பானது சமகால அரசியல் தொடர்பாகவும் குறிப்பாக மயிலத்தமடு, மாதவனைப் பகுதிகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பான முழு விபரங்களை அறியும் முகமாகவும் அதற்கான தீர்வுகளை பற்றியதாகவும் இருந்தது. அத்துடன், எமது கட்சியின் எதிர்கால மாநாடு தொடர்பாகவும் இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பாகவும் கலந்துரையாடினோம். அவுஸ்திரேலியாவும் எமது நாட்டைப் போல் கூட்டாட்சி அரசியல் அமைப்பைக் கொண்ட நாடாகும். அங்கு மாநிலங்கள் போல் இங்கு மாகாணமாக காணப்படுகின்றது. அங்கு மற்றைய நாடுகளை போல் அல்லாது, இலங்கையை சேர்ந்த புலம்பெயர்ந்த சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்களாகிய பலர் வாழ்ந்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில் இலங்கை அரசாங்கமானது அவுஸ்திரேலியாவை நடுநிலைமை வகிக்கும் நாடென்ற வகையில் ஏற்றுக்கொள்ளுமெனும் ரீதியில் அவுஸ்திரேலிய அரசாங்கம் எமக்கான அரசியல் தீர்வு விடயத்தில் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.