கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து போலி விசாவை பயன்படுத்தி மலேஷியா செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலைய குடிவரவு குடியகல்வு எல்லைப் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்று முன்தினம் (06) இவர்களை கைது செய்தனர். கைதானவர்கள் 41, 37 மற்றும் 19 வயதுடையவர்களாவர். இவர்கள், நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து வருகை விசா மூலம் இலங்கை வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் ஹைதராபாத் செல்வதற்காக,இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளனர்.
இதனையடுத்து, இவர்கள் சமர்ப்பித்த விசாக்கள் மற்றும் பிற ஆவணங்கள் தொடர்பில் சந்தேகம் கொண்ட விமான நிலைய அதிகாரிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் அவற்றை சமர்ப்பித்துள்ளனர். அங்கு முன்னெடுக்கப்பட்ட தொழில்நுட்ப சோதனையில், இந்த மலேசிய விசாக்கள் போலியானவையென உறுதி செய்யப்பட்டது.