நேர்முகப் பரீட்சை நடத்தப்படாமல் எந்த ஒரு ஆசிரிய நியமனத்தையும் கல்வி அமைச்சு ஒருபோதும் வழங்காது. மேல் மாகாணத்தில் அவ்வாறு இடம்பெற்றிருந்தால் அது முற்றிலும் தவறென்றும் இது தொடர்பில் விசாரணை நடத்தப்படுமெனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
போட்டிப் பரீட்சையில் தோற்றுபவர்களின் புள்ளிகளை அடிப்படையாக வைத்தே நேர்முகப் பரீட்சைக்கு உரியவர்கள் அழைக்கப்படுகின்றனர். நேர்முகப் பரீட்சையின் போது தகைமையானவர்களாக காணப்படுபவர்களுக்கு மட்டுமே ஆசிரிய நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடை க்கான வினாக்கள் வேளையில்,மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே, கல்வி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜயந்த சமரவீர எம்பி தமது கேள்வியின் போது:
மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக மாகாண அரச சேவை ஆணைக்குழு மூலம் கடந்த ஒக்டோபர் 29 இல், பட்டதாரிகளுக்கான போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டது.
இன்னும் அந்த பரீட்சையின் பெறுபேறுகள் கூட வெளியிடப்படவில்லை. இந்நிலையில் அந்த பரீட்சைக்குத் தோற்றியவர்களுக்கு நியமனம் வழங்கி, வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.
பரீட்சைகளுக்கான பெறுபேறுகள் வெளியான பின்னர், நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டே நியமனங்கள் வழங்கப்படுவது வழமை. எனினும், பரீட்சை நடத்தப்பட்டு 09 நாட்களே கடந்துள்ளது. இந்நிலையில் பெறுபேறுகள் கூட வெளியாகவில்லை. இந்நிலையிலே நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இது பெரும் அநீதியான செயலாகும்.
இது தொடர்பில் கல்வி அமைச்சு எடுக்கும் நடவடிக்கை என்ன என்றும் அவர் தமது கேள்வியில் வினவினார்.
இதற்கு பதிலளிக்கும் போதே கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் இவ்வாறு தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்