உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் மற்றுமொரு மேலதிக வீரராக வேகப்பந்து வீச்சாளர் பிரமோத் மதுஷான் இணைந்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியா சென்ற மதுஷான், நேற்று முன்தினம் (01) தொடக்கம் இலங்கை அணியுடன் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமார் காயம் காரணமான இலங்கைக் குழாத்தில் இருந்து விலகி நேற்று (02) இலங்கை திரும்பிய நிலையிலேயே மேலதிக வீரராக மதுஷானை அணியில் சேர்க்க அணி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
பின்வரிசையில் துடுப்பெடுத்தாடக் கூடியவராகவும் இருக்கும் மதுஷான், இலங்கை குழாத்தில் மேலும் உபாதைகள் ஏற்படும் பட்சத்தில் ஐ.சி.சி தொழில்நுட்பக் குழுவின் ஒப்புதலுடன் 15 பேர் கொண்ட குழாத்தில் இணைக்க வசதியாகவே மேலதிக வீரராக இடம்பெற்றுள்ளார்.
ஏற்கனவே உபாதையால் அணியில் இருந்து விலகிய அணித் தலைவர் தசுன் ஷானக்க இலங்கை குழாத்துடன் தொடர்ந்து இருக்கின்றபோதும் அவரால் மீண்டும் 15 பேர் குழாத்தில் இணைய முடியாத நிலை உள்ளது. தவிர இலங்கை குழாத்தில் உபாதை காரணமாக மதீஷ பதிரணவும் விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அணியில் மேலதிக வீரர்களாகச் சென்ற அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் துஷ்மன்த சமீர இருவரும் இவர்களுக்கு பதில் இலங்கை 15 பேர் குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.