– மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையில் சம்பவம்
ஒலுவில் பிரதேசத்தில் மின்னல் தாக்கத்தின் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன் மூவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
பலத்த இடி மின்னல் நிகழ்ந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் ஒலுவில் வெளிச்ச வீட்டு பகுதியினை அண்டிய பிரதேசத்தில் நேற்று (07) மாலை நிகழ்ந்துள்ளது.
மின்னல் தாக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர் ஒலுவில் இரண்டாம் பிரிவினைச் சேர்ந்த 34 வயதுடைய சுபைதீன் நிஜாமுதீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.
ஒலுவில் வெளிச்ச வீட்டுக்கு அண்மையில், தென்கிழக்கு பல்கலைக்கழக பின்புறத்தில் இவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இம்மின்னல் தாக்கம் நிகழ்ந்துள்ளது.
மின்னல் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட ஏனைய மூவரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒலுவில் ஏழாம் பிரிவைச் சேர்ந்த 32 வயதுடைய இல்முதீன், ஒலுவில் இரண்டாம் பிரிவினைச் ஐம்பது வயதுடைய எஸ்.எம் அஹமட், ஒலுவில் நான்காம் பிரிவினைச் சேர்ந்த 36 வயதுடைய கே.அஸ்மின் ஆகியோரே மின்னல் தாக்கத்திற்கு இலக்கானவர்களாவர்.
மின்னல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இவர்கள் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த குடும்பஸ்தர் பொத்துவில் பிரதேசத்தினை பிறப்பிடமாகக் கொண்டவர். மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த இவருக்கு 13 வயதுடைய என்.எம்.இம்தியாஸ், எட்டு வயதுடைய என்.பாத்திமா நிப்றா, ஆறு வயதுடைய என்.எம்.இம்ரான், இரண்டு வயதுடைய என்.எம்.இம்தியாஸ் ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்)