உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை ஆரம்பித்து முதல் ஆட்டத்தில் பங்கேற்ற நடப்புச் சம்பியன் இங்கிலாந்து அணி நியூசிலாந்துக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடி 282 ஓட்டங்களை பெற்றது.
அஹமதாபாத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
ஜோ ரூட் 77 ஓட்டங்களை பெற்றபோதும் மற்ற வீரர்கள் தமது ஓட்டங்களை அரைச்சதம் வரையில் அதிகரிக்கத் தவறினர். எனினும் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 282 ஓட்டங்களை பெற்றது.
இதன்போது நியூசிலாந்து அணி சார்பில் மட் ஹென்ரி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மிச்சல் சான்ட்னர் மற்றும் கிளன் பிலிப்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
உலகக் கிண்ணத்தில் இரண்டாவது போட்டியில் இன்று (06) நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும்.