சீனாவின் ஹான்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் 18 வயதே ஆன தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்றார்.
ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இலங்கை பெற்ற 12 ஆவது தங்கப் பதக்கம் இது என்பதோடு மெய்வல்லுனர் போட்டியில் 2002 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை பெறும் முதல் தங்கப் பதக்கமும் இதுவாகும்.
இலங்கை நேரப்படி நேற்று மாலை இடம்பெற்ற இந்தப் போட்டியை தருஷி 2:02.20 நிமிடங்களில் பூர்த்தி செய்தே முதலிடத்தை பெற்றார். இதில் இலங்கை சார்பில் பங்கேற்ற மற்ற வீராங்கனையான கயந்திகா அபோரத்ன போட்டித் தூரத்தை 2:05.87 நிமிடங்களில் நிறைவு செய்து கடைசி இடத்தையே பெற்றார்.
இதில் 2:03.75 நிமிடங்களில் போட்டியை நிறைவு செய்த இந்தியாவின் பெயின் ஹர்மிலன் வெள்ளிப்பதக்கத்தை வென்றதோடு 2:03.90 நிமிடங்களில் போட்டியை நிறைவு செய்த சீனாவின் வாங் சுன்யு வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.
800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை சாதனைக்கு சொந்தக்காரரான தருஷி, வளல ஏ ரத்நாயக்க கல்லூரியில் இருந்து தடகள போட்டிகளுக்கு பிரவேசித்தார். அவரது பயிற்சியாளராக சுசன்த பெர்னாண்டோ செயற்பட்டு வருகிறார்.
இதேவேளை நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணி 3:30.88 நிமிடங்களில் போட்டியை நிறைவு செய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன்போதும் இலங்கை அணி புதிய தேசிய சாதனையையும் படைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் இலங்கை சார்பில் தருஷியுடன் நதீஷா ராமநாயக்க, ஜயேஷி உத்தரா மற்றும் சயுரி மெண்டிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை அணி 3:33.27 நிமிடங்களில் போட்டியை நிறைவு செய்து படைத்த சாதனையே முறியடிக்கப்பட்டது.
அதேபோன்று ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியிலும் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது. இதன்போது இலங்கை அணி போட்டித் தூரத்தை 3:02.55 நிமிடங்களில் நிறைவு செய்தது.
இலங்கை அணிக்காக ராஜித்த ராஜகருணா, பபசர நிக்கு, அருண தர்ஷன மற்றும் காலிங்க குமார ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
நேற்று நடைபெற்ற பெட்மின்டன் ஒற்றையர் பிரிவு 16 பேர் சுற்றில் போட்டியிட்ட விரேன் நெத்தசிங்கவுக்கு முன்னேறிச் செல்ல முடியாமல்போனது. சீன தைபே வீரர் டியேன் சென்னை எதிர்கொண்ட அவர் 2–0 என தோல்வியை சந்தித்தார். இதன் முதல் சுற்றில் 21–16 புள்ளிகளால் தோல்வியை சந்தித்த நெத்தசிங்க இரண்டாவது சுற்றை 21–10 என்ற புள்ளிகளால் இழந்தார். இம்முறை ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெட்மின்டன் போட்டியில் இலங்கை சார்பில் நெத்தசிங்க மாத்திரமே பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று மல்யுத்தப் போட்டியில் இலங்கையின் ஒரே பிரதிநிதித்துவமான நெத்மி அஹிசா இன்று (05) 53 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிடவுள்ளார். இதன்போது அவர் கசகஸ்தான் வீராங்கனை செட்னேவா மரினாவை எதிர்த்தாடவுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் கராட்டே போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளதோடு இதில் இலங்கை சார்பில் தெனெத் பெர்னாண்டோ மற்றும் ஹேஷானி ஹெட்டியாரச்சி போட்டியிடவுள்ளனர்.
இதில் 20 வயதான தெனெத் 67 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிடவுள்ளார். மொரட்டுவை வேல்ஸ் குமார கல்லூரியைச் சேர்ந்த அவர் தெற்காசிய சம்பியனாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 25 வயதான ஹேஷானி சபரகமுவ பல்கலைக்கழக மாணவியாவார்.
சீனாவிலிருந்து நிரோஷான் பிரியங்கர