ஜேர்மனியில் நடைபெறவுள்ள பெர்லின் குளோபல் கலந்துரையாடலில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று ஜேர்மனிக்கு பயணமாகவுள்ளார்.
கியூபாவில் நடைபெற்ற ஜி 77 மாநாடு மற்றும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத் தொடரில் பங்கேற்ற ஜனாதிபதி நேற்று முன் தினம் தமது பயணத்தை முடித்து நாடு திரும்பினாரர்.
இந்நிலையிலே,ஜேர்மனியில் குளோபல் மநாடு நடைபெறுகிறது. தற்போதைய காலநிலை மாற்றம், அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு உலகளாவிய ரீதியில் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கான உயர்மட்ட கலந்துரையாடலாக இது அமையவுள்ளது.
நாளை 27 நாளை மறுதினம் 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது ஜேர்மனியின் சான்செலர் ஒலாப் சோல்ஸ் மற்றும் ஏனைய அரசியல் மற்றும் வர்த்தக துறை சார்ந்த தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளார்.
மேற்படி கலந்துரையாடலில் ஜேர்மனிய சான்செலர் ஒலாப் சோல்ஸ், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்ள்ஸ் மைக்கல் மற்றும் பெல்ஜிய பிரதமர் அலெக்ஸான்டர் டி குரோ ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்