யாழ்ப்பாணப் பிரதேசத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் வண்டியொன்றுடன் ஆட்டோவொன்று நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட கோர விபத்தில் படுகாயமடைந்த ஐவரில் இருவர் ஸ்தலத்திலேயே பலியானதுடன் மேலும் மூவர் கலேவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து தம்புள்ள டென்ஸில் கொப்பேகடுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தம்புள்ள – குருநாகல் பிரதான ( ஏ-6 ) வீதியில் கலேவெல பொலிஸ் பிரிவிலுள்ள பெலிகமுவ என்ற இடத்தில் நேற்று (24) அதிகாலை 6.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
ஒரு பெண் அவரது கணவர் மற்றும் மகள் ஆகியோருடன் இவரது உறவினர் ஒருவருமாக ஐவர் ஓட்டோவில் பயணித்ததாகவும் விபத்தில் அப்பெண்ணின் கணவரும் ஓட்டோ சாரதியுமே பலியாகியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புள்ள டென்ஸில் கொப்பேகடுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட மூவரின் நிலைமை கவலைக்கிடமாகக் காணப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் பின்னர் கண்டி வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப் பட்டதாக தம்புள்ள வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
யாழிலிருந்து எம்பிலிப்பிட்டிய நோக்கிப் பயணித்த பஸ் வண்டியுடன் சிலாபம் ஆரச்சிக்கட்டுவ பிரதேசத்திலிருந்து தம்புள்ள நோக்கிப் பயணித்த ஆட்டோவுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியிருப்பதாக சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற் கொண்டு வரும் கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புள்ள தினகரன் நிருபர்