சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலைச் சந்திப் பகுதியில் நேற்று (03) இரவு இரண்டு பேருந்துகள் நேர் எதிரே மோதிக் கொண்டதில் இ.போ.ச பேருந்தின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; வவுனியாவில் இருந்து யாழ் நோக்கி வந்த இ.போ.ச பேருந்தும், யாழில் இருந்து வாழைச்சேனை நோக்கிச் சென்ற சுற்றுலா பேருந்து ஒன்றும் மீசாலை சந்திப் பகுதியில் மோதியதில் இ.போ.ச பேருந்து கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகி பேருந்து தரிப்பிடத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் இ.போ.ச பேருந்து சாரதி மாத்திரம் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் சுற்றுலா பேருந்தின் பின்பாக வந்த டிப்பர் வாகனம் சுற்றுலா பேருந்து மீது மோதிய போதிலும் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சாவகச்சேரி விசேட நிருபர்