Monday, May 20, 2024
Home » உஷ்ணத்தின் தாக்கங்களை தவிர்ப்பது மிக அவசியம்

உஷ்ணத்தின் தாக்கங்களை தவிர்ப்பது மிக அவசியம்

by Gayan Abeykoon
May 9, 2024 1:00 am 0 comment

நாட்டில் கடந்த சில வாரங்களாக அதிகரித்த உஷ்ணகாலநிலை நிலவி வருகிறது. இக்காலநிலையின் தாக்கம் எல்லா மட்ட மக்களாலும் உணரப்படுகிறது. கடும் உஷ்ணம் வாட்டி வதைப்பதாக மக்களே சொல்லும் அளவுக்கு நிலமை காணப்படுகிறது.

இந்த உஷ்ண காலநிலை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் தற்போதைய கடும் உஷ்ண காலநிலையின் விளைவாக நீர்த்தேக்கங்களிலும் குளங்களிலும் தண்ணீர் மட்டம் வேகமாகக் குறைவடைந்து வருகிறது. அதன் விளைவாக நீரின் பாவனையும் அதிகரித்துள்ளது.

இவை இவ்வாறிருக்க, இந்த கடும் உஷ்ண காலநிலை இலங்கை மாத்திரமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் உணரப்படுகிறது. இந்த வெப்பநிலை அதிகரிப்புக்கு காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றமே பிரதான காரணம் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கைத்தொழில் புரட்சியைச் தொடர்ந்து ஏற்பட்டுவரும் கைத்தொழில்துறை முன்னேற்றங்களின் பின்புலத்தில் காலநிலை மாற்றத்திற்கு அதிக பங்களிப்பு நல்கப்படுகிறது. அதன் பிரதிபலனாகவே தற்போதைய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறான சூழலில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிர்ச்சிகர செய்தியான்றை நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ளது. தற்போதைய உஷ்ண காலநிலையினால் கடந்த ஒரு வார காலத்தில் யாழ்ப்பாண வைத்தியசாலை விடுதியில் நான்கு முதல் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன என்று வைத்தியசாலையின் பொதுவைத்திய நிபுணர் த. பேரானந்தராஜா தெரிவித்திருக்கிறார்.

யாழ். குடாநாட்டில் நிலவி வரும் கடும் உஷ்ணத்தினால் ஏற்பட்ட சூரிய வெப்ப அதிர்ச்சியே இந்த மரணங்களுக்கு காரணமாக சுட்டிக்காட்டப்பட்டாலும் கூட இதயநோய், சிறுநீரகப் பாதிப்பு, குருதிக்குழாய் பாதிப்பு போன்ற நாட்பட்ட நோய்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு இதன் அச்சுறுத்தல் மிக அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் பல பிரதேசங்களிலும் கடும் உஷ்ணம் நிலவுகிறது. இந்த சூழலில் கடும் உஷ்ணத்தினால் மரணங்கள் ஏற்பட்டிருப்பது குறித்த செய்தி வெளியாகி இருப்பது பல்வேறு மட்டங்களதும் அவதானத்தைப் பெற்றுள்ளது.

பொதுவாக காலநிலை மாற்றத்தின் விளைவாக புவிவெப்பநிலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. ஒரு மனிதனின் உடல் குறிப்பிட்ட அளவு வெப்பத்தை தாங்கக் கூடியதாகும். அந்த அளவை விடவும் வெப்பநிலை தாண்டிச் செல்லும் போது உடலில் உபாதைகள் ஏற்படலாம். குறிப்பாக அதிக வியர்வை, வியர்க்குருக்கள் போன்றன வெளிப்படலாம். உடலில் வியர்வை அதிகரிக்கும் போது உடலில் நீரிழப்பு அதிகரிக்கும். அதற்கு ஏற்ப நீரைப் பருகுவது இன்றியமையாததாகும். இருந்த போதிலும் நீர் பருகுவதன் முக்கியத்துவத்தையும் உடல் இழக்கும் நீரை ஈடுசெய்வதன் அவசியத்தையும் அநேகர் உணராதுள்ளனர். ஆனால் கடும் உஷ்ணம் காரணமாக சில சமயங்களில் சிறுநீரகம், இதயம், சுவாசப்பை போன்றவை கூட செயலிழக்கலாம். அத்தோடு குருதிச் சிறுதட்டுக்கள் குறைவடைந்து அதன் விளைவான உபாதைகளும் உடலில் ஏற்படலாம்.

உஷ்ண காலத்தில் அதிக வியர்வை ஏற்பட்டு உடலில் நீரிழப்பு ஏற்படுவதன் விளைவாக திடீர் மயக்கம் கூட ஏற்படலாம். சில சமயம் மூளையிலும் செயலிழப்பு ஏற்படலாம். அவை சூரிய வெப்ப அதிர்ச்சிக்கு மூலகாரணமாக அமைகின்றன. இவற்றை மருத்துவ நிபுணர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த கடும் உஷ்ண காலநிலை முதியவர்களுக்கும் நாட்பட்ட நோயாளர்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். அதற்காக வளர்ந்தவர்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தாது என்றில்லை.

அதனால் கடும் உஷ்ணம் நிலவும் தற்போதைய சூழலில் ஒவ்வொருவரும் தினமும் போதியளவில் நீரைப் பருகவும், நிழலில் போதியளவில் ஒய்வு எடுத்துக் கொள்ளவும் தவறக்கூடாது. குறிப்பாக கடும் வெப்பகாலநிலை நிலவும் போது வயல் உள்ளிட்ட திறந்தவெளிகளில் தொழில்களில் ஈடுபடுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அதேநேரம் தற்போதைய சூழலில் நீராகாரங்களை அடிக்கடி பருகுவதோடு முகத்தையும் கண் புருவங்களையும் அடிக்கடி தண்ணீரால் கழுவிக் கொள்ளவும் வேண்டும். அதன் ஊடாக உடலில் உஷ்ணத்தின் அளவு அதிகரிப்பதைப் பேணிக் கொள்ளக்கூடியதமாக இருக்கும்.

அதன் ஊடாக சூரிய வெப்ப அதிர்ச்சிக்கு முகம் கொடுப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

ஆகவே தற்போதைய அதிக உஷ்ண காலநிலையினால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளைத் தவிர்த்துக் கொள்வதில் ஒவ்வொருவரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளும் அறிவுரைகளும் பெரிதும் பயன்மிக்கதாக இருக்கும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT