8 அமைச்சுகளின் செயலாளர்கள் மாற்றம்; 2 அமைச்சுகளின் செயலாளர்களின் பதவி நீடிப்பு

- 2 அமைச்சுகளின் செயலாளர்கள் வேறு அமைச்சுக்கு மாற்றம்
- சில அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 8 அமைச்சுகளின் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, அதில் 2 அமைச்சுகளின் செயலாளர்களின் அமைச்சுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 2 அமைச்சுகளின் செயலாளர்களின் பதவிக் காலம் நீடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2023 ஜனவரி 01, முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனங்களை வழங்கியுள்ளார்.

அந்த வகையில், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக இருந்த M.M.P.K. மாயாதுன்னே, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெண்கள் சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய H.K.D.W.M.N.B. ஹபுஹின்னே, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், ஜனவரி 01, 2023 முதல் அமுலுக்கு வரும் வகையில், யாழ்.மாவட்டச் செயலாளராக பணியாற்றிய K. மஹேசன் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிகச் செயலாளராக பணியாற்றிய M.M. நயிமுதீன் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளராக பணியாற்றிய M. யமுனா பெரேரா
ஜனாதிபதியினால், ஜனவரி 01, 2023 முதல் அமுலுக்கு வரும் வகையில், பெண்கள் சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றிய P.V. குணதிலக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், விவசாய அமைச்சின் மேலதிகச் செயலாளராகப் பணியாற்றிய RMWS. சமரதிவாகர சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச்  செயலாளராகப் பணியாற்றிய AMPMB அத்தபத்து வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.


இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், கல்வி அமைச்சின் செயலாளர் M.N. ரணசிங்க, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் U.D.C. ஜயலால், நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா ஆகியோர் ஒரு வருட காலத்திற்கு மீண்டும் அப்பதவிகளில் நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது


Add new comment

Or log in with...