8ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் பதவிப்பிராமாணம் (Live)

இலங்கையின் 8ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் பதவிப்பிரமாண நிகழ்வு தற்போது பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்று வருகின்றது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 8ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க, சற்று முன்னர் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்துக்கு அமைய அடுத்துவரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்குப் பதில் ஜனாதிபதியும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையான வாக்குகளால் நேற்று (20) தெரிவுசெய்யப்பட்டார்.

இதில் பதில் ஜனாதிபதியும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸசாநாயக ஆகியோரின் பெயர் அடுத்துவரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவிக்கு நேற்றுமுன்தினம் (19) பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டிருந்தனர்.

இது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று (20) பாராளுமன்றத்தில் நடைபெற்றதுடன், இதில் ரணில் விக்ரமசிங்கவுக்கு 134 வாக்குகளும், டளஸ் அழகப்பெருமவுக்கு 82 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 03 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. அடுத்துவரும் ஜனாதிபதிப் பதவிக்குத் தெரிவுசெய்யப்பட போட்டியிடும் வோட்பாளர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர்களால் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கையில் அரைவாசிக்கு மேலான எண்ணிக்கையைப் பெற்றிருக்க வேண்டும். இந்த எண்ணிக்கையை ரணில் விக்ரமசிங்க பெற்றிருந்தார். இன்றைய வாக்கெடுப்பில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 219ஆக அமைந்ததுடன், இதில் ரணில் விக்ரமசிங்கவுக்கு 134 வாக்குகள் கிடைக்கப்பெற்றன.

இதில் 223 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்ததுடன், இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்தனர். நான்கு வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

இதற்கமைய ரணில் விக்ரமசிங்க எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக பாராளுமன்றத்தில் அறிவித்தார். அத்துடன், 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்துக்கு அமைய இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தின் எஞ்சிய காலப் பகுதியில் சேவையாற்றுவதற்கே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தகுதி பெற்றுள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்க கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன்23ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்டார்.

1949ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி பிறந்த ரணில் விக்ரமசிங்க அவர்கள் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பிரதமராகப் பதவிவகித்தார்.

1970 ஆம் ஆண்டு களனி தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளராக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த அவர், பின்னர் பியகம தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 1977 ஆம் ஆண்டில் முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட அவர், ஜே.ஆர். ஜயவர்தன அரசின் அமைச்சரவையில் இளம் அமைச்சராக இருந்ததுடன் இளைஞர் விவகாரம் மற்றும் தொழிற்துறை அமைச்சராக அவர் அப்போது கடமையாற்றினார். 28 வயதில் வெளிவிவகார பிரதியமைச்சராக நியமிக்கப்பட்ட அவர், பின்னர் இளைஞர் விவகாரம், கல்வி மற்றும் தொழில், விஞ்ஞான மற்றும் தொழிநுட்பம் போன்ற கபினட் அமைச்சு பதவிகளை வகித்தார்.

1989 மார்ச் 06 முதல் 1993 மே 07 வரையான காலப்பகுதியில் பாராளுமன்ற சபை முதல்வராக பணியாற்றிய விக்ரசிங்க அவர்கள் 1994 முதல் 2001 வரை மற்றும் 2004 முதல் 2015 வரை இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக பதவிவகித்துள்ளார்.

அவர் முதன்முறையாக 1993 மே மதம் 07 ஆம் திகதி பிரதமராக தெரிவு செய்யப்பட்டதுடன் 1994 ஆகஸ்ட் 19 வரை அந்த பதவியை வகித்தார். இவர் இரண்டாவது தடவையாக 2001 டிசம்பர் 09ஆம் திகதி முதல் 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 02ஆம் திகதிவரையும், மூன்றாவது தடவையாக 2015 ஜனவரி 09ஆம் திகதி முதல் 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21ஆம் திகதி வரையும், நான்காவது தடவையாக 2015 ஓகஸ்ட் 24ஆம் திகதி முதல் 2018 ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதிவரையும், ஐந்தாவது தடவையாக 2018 டிசம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 21ஆம் திகதி வரையும் பிரதமராகக் கடமையாற்றியிருந்தார்.

இதன் பின்னர் கடந்த மே மாதம் 09ஆம் திகதி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க அம்மாதம் 12ஆம் திகதி மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவியைவகித்துவரும் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அரசியலமைப்புக்கு அமைய கடந்த 14ஆம் திகதி முதல் பதில் ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான ரணில் விக்ரமசிங்க அவர்கள் பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டு சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


Add new comment

Or log in with...