சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டு சீசெல்சில் தடுத்து வைக்கப்பட்டுள்ள லொரென்சோ புத்தா 04 மீன்பிடிப் படகு மற்றும் அங்குள்ள 06 மீனவர்களை அழைத்துவர அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார். லொரென்சோ புத்தா- 04 ஆழ்கடல் மீன்பிடிப் படகையும் அதிலிருந்த மீனவர்களையும் இலங்கைக்கு அழைத்துவருவதற்கான பேச்சுவார்த்தை கடற்றொழில் அமைச்சில் நேற்று (06) நடைபெற்றது. இதன் போது படகின் உரிமையாளர் பிரான்சிஸ் மில்ரோய் பெரேரா அமைச்சரிடம் தெரிவித்ததாவது:
கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட தமது படகு மற்றும் மீனவர்கள் தற்போது சீசெல்ஸ் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.இவர்கள்
அந்நாட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். படகை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு எரிபொருள் தேவைப்படுகிறது.இதற்கு 15 இலட்சம் ரூபா செலவு ஏற்படும்.
இவ்வளவு பெரிய தொகையை செலவிடுவத ற்கு, தன்னிடம் நிதியில்லை.படகுக்கென வங்கியில் பெற்ற கடனுக்காக மாதாந்தம் 07 இலட்சம் ரூபாவை செலுத்தி வருகிறேன்.இதனால் அரசாங்கம் தனக்கு நிவாரணம் வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.மீனவர்களுக்கு தேவையான உணவைப் படகில் சமைத்துக் கொள்வதற்கு சீசெல்ஸ் அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. இதனை வெளியிலிருந்து பெற்றுக் கொள்ளவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான நிதி வசதி மீனவர்களிடம் கிடையாதெனவும் அவர் தெரிவித்தார்.
இதன் போது உடனடியாக சீசெல்சிலுள்ள இலங்கை தூதரக அதிகாரியை தொலைபேசி மூலம்தொடர்பு கொண்டஅமைச்சர் மீனவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.
அத்துடன் படகின் உரிமையாளருக்கு வங்கியிலிருந்து மேலதிகமாக கடன் பெற்றுக் கொடுப்பதற்கு உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தமது ஊடகச் செயலாளர் நெல்சன் எதிரிசிங்கவுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.