இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவன் துஷார எதிர்வரும் தென்னாபிரிக்க ரி20 லீக் தொடரான எஸ்.ஏ20 இல் மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணியில் இணைந்துள்ளார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜப்ரா ஆர்சருக்கு பதிலாகவே அவர் அந்த அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
2024 இந்திய பிரீமியர் லீக் ஏலத்தில் நுவன் துஷாரவை ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கிய நிலையில் அவர் அந்த அணிக் குடும்பத்தில் இடம்பெற்றுள்ளார்.
கொழும்பில், மென்பந்து கிரிக்கெட் மூலம் தனது கிரிக்கெட் வாழ்வை ஆரம்பித்த 29 வயதான துஷார கடினப்பந்து கிரிக்கெட்டுக்கு மாறி திறமையை வெளிப்படுத்தினார். மாலிங்க பாணியில் பந்து வீசும் அவர் இதுவரை இலங்கை அணிக்காக ஐந்து ரி20 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார்.
இதேநேரம் இலங்கை அணியின் மற்றுமொரு வீரரான லசித் குரூஸ்புள்ளே பங்களாதேஷில் நடைபெறவுள்ள பி.பீ.எல். தொடருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் டர்டெண்டோ டாக்கா அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளார். இவர் இலங்கை தேசிய அணிக்காக விளையாடாதபோதும் இறுதியாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற அபு தாபி டி10 தொடரில் விளையாடியதோடு, தற்போது பி.பீ.எல். தொடருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.