விளையாட்டு வீரராக, நடுவராக அறியபப்பட்டு வந்த மருதமுனை எம்.எல்.எம். ஜமால்டீன் முதியோருக்கான சிறந்த விளையாட்டு வீரராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உலக முதியோர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் நடத்தப்பட்ட முதியோருக்கான சிறந்த விளையாட்டு வீரர்கள் தெரிவிலேயே இக்கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
இவர் அம்பாறை மாவட்டத்தில் முதலாவது இடத்தினையும், கிழக்கு மாகாணத்தில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண கலை கலாசார விளையாட்டுத்துறை சார்ந்தவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு அண்மையில் காரைதீவு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் ஜமால்டீன் பொன்னாடை போர்த்தி ஞாபகச்சின்னம் மற்றும் சான்றிதழ் ஆகியன வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
சமாதான நீதிபதியான எம்.எல்.எம்.ஜமால்டீன் சமூக சேவைகளில் ஈடுபாடுடையவர். அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் செயலாளராக கடந்த ஏழு வருடங்களில் பணியாற்றியுள்ளதுடன், மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவராகவும் பதவி வகித்தவர். உதைபந்தாட்ட வீரராகவும் நடுவராகவும் நீண்ட காலமாக செயற்பட்டு வரும் இவர் மருதமுனை ஈஸ்ரன் யூத் விளையாட்டுக் கழகத்தின் தவிசாளராகவும், மருதமுனை ஊடகப் பேரவையின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
ஜமால்டீன் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கிடையே நடத்தப்பட்ட தகுதிகாண் ஆவண போட்டியின் போதே எம்.எல்.எல்.ஜமால்டீனுக்கு இக்கௌரவம் லழங்கப்பட்டுள்ளது.
-ஜெஸ்மி எம்.மூஸா... (பெரியநீலாவணை தினகரன் நிருபர்)