முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இப்பகுதியில் கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்றுமுன்தினம் (19) சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட விசேட பொலிஸ் அணி மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபரொருவர் முதலில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணை நடவடிக்கையின் போது அவர் வேறு ஒரு இடத்திலிருந்து கஞ்சா போதைப்பொருளை பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அணியினரும் விசேட அதிரடி படையினரும் இணைந்து இருவரை கைதுசெய்துள்ளனர். இவர்கள் முள்ளியவளை புதரிகுடா பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 26 வயதுடைய கணவன், மனைவி என தெரியவருகின்றது.
இவர்களிடமிருந்து 214 கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்களுடைய பிரதான விநியோகஸ்தர்களையும் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
ஓமந்தை விஷேட நிருபர்