05 வருட வேலைத்திட்டம் ஜனவரியில்
தேங்காய் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்தை (02 பில்லியன்) 200 கோடி ரூபாவாக அதிகரிக்கும் இலக்கிலான திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விவசாய அமைச்சின் அதிகாரிகளுக்கு உரிய பணிப்புரைகளை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், இதற்கென ஐந்து வருட திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். இந்த ஐந்து வருடத்திட்டம் எதிர்வரும் வருடத்தில் ஆரம்பமாக உள்ளது. தெங்கு அபிவிருத்தி அதிகார சபை , தெங்குஆராய்ச்சி சபை மற்றும் லுணுவில தென்னை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் பங்கேற்புடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேங்காய் மற்றும் தெங்கு உற்பத்திப் பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் பெரும் கேள்வி காணப்படுகிறது. இந்நிலையில், நாட்டின் மொத்த தென்னை உற்பத்தியில் 100 க்கு 75 வீதம் தேசிய நுகர்வுக்காக பெறப்பட்டு,
மீதமான 25 வீதமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் நாட்டில் தேங்காய் தட்டுப்பாடு நிலவும் காலங்களில் ஏற்றுமதி நடவடிக்கைகளில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்து அவர் தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)