வரவு செலவுத்திட்டத்தை அரசியலாக பார்க்க வேண்டாமென ஜனாதிபதி தெரிவிக்கின்றார். எனினும் அனைத்தையும் அரசியலாக பார்த்ததினால்தான்,தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இன்றுவரை ஒரு தீர்வு வழங்க முடியாதுள்ளதென தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பி எஸ். ஸ்ரீதரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பெரும்பான்மை இனப்பரம்பலை கிழக்கு மாகாணத்தில் எவ்வாறு அதிகரிப்பதென்பதற்கு கையாளும் யுக்தியே மயிலத்தமடு , மாதவனை ஆக்கிரமிப்பு என தெரிவித்த அவர்,
நாட்டில் காருண்யமும் இரக்கமும் இல்லாத மனிதர்களாகவே இத்தகையோர் செயற்படுகின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மேய்ச்சல் தரைகளை அடாத்தாக பிடித்து தாங்களே, பண்ணையார்கள் என உரிமை கோருபவர்கள் வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு அந்ததந்த மாவட்டங்களில், காணி மற்றும் பண்ணைகள் உள்ளன.
மயிலத்தமடு , மாதவனை பகுதி சிறந்த மண் வளம் கொண்டது .என்பதாலே இவர்கள்,தமிழர் பகுதிக்கு அனுப்பப்படுகின்றனர்.
அந்தப் பிரதேசத்தில் சிங்கள குடியேற்றங்களை செய்வதன் மூலம் பொலனறுவை ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சன பரம்பலை இல்லாமல் செய்யும் செயல்பாடுகள் மிகத்துல்லியமாக இடம்பெறுகின்றன.இவ்வாறான நிலையில் எவ்வாறு நல்லிணக்கம் பற்றிப்பேச முடியும்?
2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில், தற்போதைய ஜனாதிபதி பிரதமராக பதவி வகித்தபோது, மங்கள சமாவீர வெளிநாட்டு அமைச்சராக கருத்துக்களை வெளியிட்டார்.
நாம் இங்கு நடந்த யுத்தக்குற்றங்களை ஏற்றுகொண்டு பிரச்சினைகளுக்கு ஒரு நியாயமான தீர்வுக்குச் செல்கின்றோம். விசாரணை செய்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார். அதற்காக இதுவரை செய்தது என்ன?தமிழ் சமூகத்தின் வேதனைகளையும் வலிகளையும் மூடி மறைக்க முயற்சிக்க வேண்டாம்.இதற்கு சில சர்வதேச நாடுகளும் சார்பாக செயற்படுவது கவலைக்குரியது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)