தேசிய மக்கள் சக்தியுடன் விவாதம் நடத்த தயாரெனத் தெரிவித்துள்ள எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, விவாதத்தில் யார் வெற்றி பெற்றாலும் விவாதத்தின் நேர்மையான கருத்துக்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான விவாதம் மே மாதத்தில் நடத்தப்பட்டால் பங்கேற்கலாம்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் கீழ், 165 ஆவது கட்டமாக ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை கம்பஹா பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றுக்கு வழங்கும் நிகழ்வில், கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பேசிய அவர்:
பொருளாதாரக் கொள்கையில் யாருடையது நன்மைபயக்கும் எந்தக் கொள்கை சிறந்தது என்ற விவாதத்தில் பங்கேற்க நான் தயார்.
விவாதங்கள், கலந்துரையாடல்கள் அவசியம் என்பது போலவே நாட்டிற்கான சேவையும் அவசியம்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழுவுக்கும், தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழுவுக்கும் இடையில் இது பற்றிய விவாதம் நடத்தப்படுவது சிறந்தது. இது தவிர, அனுரகுமார திஸாநாயக்கவுடனும் விவாதத்தில் பங்கேற்க நான்த யார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இதில் தலையிட்டு, இரண்டு விவாதங்களையும் மே மாதம் நடத்த வேண்டும்.
இவ்விவாதத்தில் யார் வெற்றி பெற்றாலும், விவாதத்தில் முன்வைக்கப்பட்ட நேர்மையான, தரமான கருத்துக்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
மக்களுக்கு போலியான கூட்டங்களைக் காட்டி மக்களை ஏமாற்றவோ, பொய்யான கதைகளை கூறி நழுவிச் செல்லவோ கூடாது என்றும் சஜித்பிரேமதாச தெரிவித்தார்.