அநுராதபுரம் மாவட்டத்தில் அதிபர் சேவை தரம் 111 தமிழ்மொழி மூலம் சித்திபெற்றோருக்கு வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் (06) இடம்பெற்ற வைபவத்தின்போது மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத்தினால் நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் தமிழ் மொழிமூலமான 17 பேர் புதிய அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சைகளில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் அதிகூடிய புள்ளிகளை பெற்றவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு இம்மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் ஒரு மாத காலத்திற்கு பாடசாலை முகாமைத்துவம் சம்பந்தமான பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்னர் இவர்கள் பாடசாலைகளுக்கு அதிபர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
இந்த நியமனம் வழங்கும் நிகழ்வுக்கு வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரகோன் மற்றும் வடமத்திய மாகாண முதலமைச்சின் செயலாளர் மற்றும் வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம். சமரகோன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கல்நேவ தினகரன் விசேட நிருபர்