மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியதைத் தொடர்ந்து, அம்மக்கள் இந்நாட்டுக்கு ஆற்றிய சேவைகளை பாராட்டியும் அவர்களை கௌரவித்தும் ‘நாம் -200’ நிகழ்வின் அறிமுக விழாவும் சின்னம் வெளியீடும் பத்தரமுல்லையிலுள்ள நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சில் நேற்று வியாழக்கிழமை (05) நடைபெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டிலும் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையிலும் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், தவிசாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் விசேட பிரதிநிதி எல்டோஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, மலையக மக்களின் 200 வருட பூர்த்தியையிட்டு நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சினால் பல்வேறு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஓரங்கமாக முன்னெடுக்கப்பட்டுள்ள ‘நாம் -200’ திட்டமானது, மலையக மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.