பிரதமர் பங்கேற்புடன் இடம்பெற்ற 219ஆவது 'அமா தம் சிசிலச' நிகழ்வு

பிரதமர் பங்கேற்புடன் இடம்பெற்ற 219ஆவது 'அமாதம் சிசிலச' நிகழ்வு-PM Mahinda Rajapaksa Poya Day Event-Ama Dam Sisila

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கு அமைய அனைத்து பௌர்ணமி தினங்களிலும் நடத்தப்படும் 'அமா தம் சிசிலச' தர்ம உபதேசத் தொடரின் 219ஆவது தர்ம உபதேசம் இன்று (16) அலரி மாளிகையில் நடைபெற்றது.

வழிபாட்டில் ஈடுபட்டதை தொடர்ந்து பிரதமர் தர்ம உபதேசம் நிகழ்த்துவதற்காக வருகை தந்த மஹவ, இபலோகம ஸ்ரீ போதிருக்காராமதிகாரி, இலங்கையின் பௌத்த மறறும் பாலி பல்கலைக்கழகத்தின் முதுகலை கற்கைநெறி பீட பீடாதிபதி பேராசிரியர் வணக்கத்திற்குரிய மொரகொல்லாகம உபரதன தேரரை வரவேற்றார்.

பௌத்த மதத்தினூடாக கிடைக்கும் மன அமைதியை உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கப்பெறச் செய்யும் உன்னத நோக்கத்தில் இந்த தர்ம உபதேசத் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட 'அமா தம் சிசிலச' தர்ம உபதேசத் தொடர் தொடர்ச்சியாக சகல பௌர்ணமி தினங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றமையை பாராட்டி அதன் மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தினை வணக்கத்திற்குரிய தேரர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இந்த பௌர்ணமி தினத்தின் முக்கியத்துவம் குறித்தும் உபதேசகரான வணக்கத்திற்குரிய தேரர் வலியுறுத்தினார்.

"முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாட்டில் பெரும் சபிக்கப்பட்ட யுத்தம் நடைபெற்றது. அப்போதைய ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மற்றும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நாட்டின் சகல இராணுவத்தினரதும் ஒத்துழைப்புடன் இந்த நாட்டின் அனைத்து மக்களின் ஆசியுடன் மாபெரும் யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், இந்த போர் படுகொலை அல்ல. மக்களை பாதுகாத்து மனிதாபிமான அடிப்படையில் இந்த போர் நடத்தப்பட்டது. நாம் அனைவரும் அவர்களை நன்றியுடன் நினைவுகூருகிறோம். இந்நாட்டு மக்கள் இன்று போன்ற பௌர்ணமி தினத்தில் சுதந்திரமாக வழிபாட்டில் ஈடுபடுவது, நாட்டில் பயணிப்பது அன்று சிறந்த தலைமைத்துவத்துடன் செயற்பட்ட எமது ஜனாதிபதியினாலேயே ஆகும்" என தனது உபதேசத்தில் வணக்கத்திற்குரிய தேரர் சுட்டிக்காட்டினார்.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய நடைபெற்ற 'அமா தம் சிசிலச' தர்ம உபதேச நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமரின் பாரியார் ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ உள்ளிட்ட கலைஞர்கள், தாதியர்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கொன்ஃபியுசியஸ் தத்துவத்தின் மூல நூலான 'LUNYA THE ANALECTS OF CONFUIUS' இன் சிங்கள மொழிப்பெயர்ப்பான 'கொன்ஃபியுசியஸ்கே ஆதரய' (கொன்ஃபியுசியஸின் காதல்) நூலின் மூலப்பிரதி அதன் மொழிப்பெயர்ப்பாளர் ISBN CAMPUS இன் சீன மொழி ஆய்வுத்துறையின் விரிவுரையாளரும் சீன மொழி மற்றும் கலாசார மையத்தின் துறை தலைவருமான வணக்கத்திற்குரிய சந்தமடுல்லே சுமனசார தேரரினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தர்ம உபதேசத் தொடரின் நிறைவில் வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கொழும்பு நாராஹேன்பிட்டி ஸ்ரீ ஹத்போதி விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலகம தம்மரங்சி தேரர் மற்றும் சீனாவின் மொழி மற்றும் கலாசார பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ரங்க மெதிவ் வீரரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...