காலஞ்சென்ற வணக்கத்திற்குரிய புத்தங்கல ஆனந்த தேரரின் பூதவுடலுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (30) முற்பகல் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கொழும்பு 07, அகில இலங்கை பௌத்த மஹா சம்மேளன மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஆனந்த தேரரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, வணக்கத்திற்குரிய தேரரின் சகோதரரான அமைச்சர் சரத் வீரசேகர அவர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.
வணக்கத்திற்குரிய புத்தங்கல ஆனந்த தேரர் தனது 78ஆவது வயதில் காலமானார்.
பிரசித்திபெற்ற தர்ம உபதேசகரான வணக்கத்திற்குரிய ஆனந்த தேரர் துறவற வாழ்க்கைக்கு வருவதற்கு முன்னர் புகழ்பெற்ற போர்த் தளபதியாக இருந்தார். ஆனந்த வீரசேகர ஒரு ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஆவார்.
தனது 34 ஆண்டுகால இராணுவ சேவையிலிருந்து 1998ஆம் ஆண்டு ஓய்வுபெற்றதை தொடர்ந்து விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் உப தலைவராக பணியாற்றியதுடன், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக வழிதவறிய இளைஞர்களை நல்வழிப்படுத்துவதற்கு அளப்பரிய சேவையாற்றினார்.
வணக்கத்திற்குரிய புத்தங்கல ஆனந்த தேரர் என்ற பெயரில் 2007ஆம் ஆண்டு மே மாதம் 01ஆம் திகதி துறவற வாழ்க்கைக்குள் நுழைந்தார்.
பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ அவர்களும் புத்தங்கல ஆனந்த தேரரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
Add new comment