எதிர்வரும் நாட்களில் பிற்பகலில் மழை
எதிர்வரும் ஒரு சில தினங்களில், நாட்டில் இரண்டாவது இடைப் பருவப் பெயர்ச்சி மழைக்கான நிலைமைகள் படிப்படியாக உருவாகும் என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, எதிர்வரும் நாட்களில் குறிப்பாக பிற்பகலில் அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகக் காணப்படுவதாக, திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும் வவுனியா, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே, மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படலாம் எனவும், ஒரு சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான கடும் மழை ஏற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
ஊவா, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் ஒரு சில இடங்களில் பனி மூட்ட நிலை எதிர்பார்க்கப்படுவதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பிரதேசங்கள் வழமை போன்று காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment